சென்னை: தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கனமழை காரணமாக மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வானிலை மையம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்க கடல் பரப்பில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்,  ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி தவிர பிற மாவட்டங்களில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து விளக்கம் அளித்துள்ளார். அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டிற்கு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கப் பெறுகிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய உள்ள இந்த வட கிழக்கு பருவமழைக் காலத்தில், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, மாநிலத்தின் இயல்பான மழை அளவில், 47.32 விழுக்காடு மழை அளவு கிடைக்கப் பெறுகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 28.10.2020 அன்று தொடங்கியது. 28.10.2020 முதல் 20.11.2020 வரையிலான இயல்பான மழையளவு 308.9 மி.மீ. ஆனால் 241.7 மி.மீ. அளவு மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையளவைவிட 22 சதவீதம் குறைவாகும். விருதுநகர் மாவட்டத்தில் இயல்பைவிட அதிகமான அளவும், சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, மற்றும் திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இயல்பான அளவும் மீதமுள்ள 23 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவும் மழை பதிவாகியுள்ளது.

 குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் 21.25 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும், இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அதிக அளவு மழைப்பொழிவு இல்லை. இந்த ஏரிக்கு உபரி நீர் வழங்கக்கூடிய மணிமங்கலம் ஏரியில் 80 விழுக்காடும், பிள்ளைப்பாக்கம் மற்றும் திருப்பெரும்புதூர் ஏரிகளில் 89 விழுக்காடும் நீர் இருப்பு உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பாசன ஏரிகளில், 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ள பாசன ஏரிகளின் விபரம்

20.11.2020தமிழகத்தில் உள்ள 14,144 பாசன ஏரிகளில், 1069 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள 21 மாவட்டங்களில், 9529 பாசன ஏரிகளில், 969 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. இதுவன்றி, கடலோர மாவட்டங்களில் உள்ள 7378 ஏரிகளில், 748 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன.

சென்னையில் உள்ள இந்திய வானிலை மையத்தின் வானிலை அறிக்கையின்படி, கன மழை ஏற்படும் நிகழ்வுகளில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்கடந்த கால நிகழ்வுகள் / தரவுகள் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 4133 பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகும்  பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன.

மிகவும் அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 321,அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 797, மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 1096, குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 1919.

முன்னெச்சரிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும்  கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் என 4680 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன.

பாதிப்பிற்குள்ளாகும் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளுக்கு முறையே குறுவட்ட மற்றும் வார்டு அளவில், பாதிப்பின் தன்மை குறித்த ஆய்வு, பேரிடர் காலத்தில் காத்துக் கொள்ள வெளியேறும் வழி மற்றும் நிவாரண மையங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அளித்திடவும், தேடுதல், மீட்பு, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் இருயது மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்களில் 14,232 மகளிர் என்பது குறிப்பிடத்கக்கது. இவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதற்கென 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

இது மட்டுமின்றி பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்களையும், நீரில் மூழ்குபவர்களையும் காப்பாற்ற நீச்சல் வீரர்கள் கண்டறிந்து தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 ஜேசிபி இயந்திரங்கள், 2115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதிக திறன் கொண்ட பம்புகள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, ஊர்க்காவல் படையினைச் சார்யத 691 நபர்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும் 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த, 11.09.2020 வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் காணொலி காட்சி மூலம் வட கிழக்கு பருவமழை மற்றும் புயல் / சூறாவளி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.

36 மாவட்டங்களுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை – முன் எச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), டிஎன்ஸ்மார்ட் செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாற அதில் கூறப்பட்டு உள்ளது.