கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று  உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. இன்று காலை வாக்குச்சாவடி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது.  ஒருவல் கொல்லப்பட்டார். நேற்று இரவு நடைபெற்ற வன்முறையில், காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.  மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வன்முறை காரணமாக இதுவரை சிறுவன் உள்பட 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வன்முறைக்கு பெயர்பெற்ற மாநிலமாக மேற்குவங்கம் மாறி வருகிறது. ஒவ்வொரு தேர்தலின்போது, அங்கு நடைபெறும் வன்முறையும், அதனால் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்,, பாஜக, கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அங்கு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. துணை ராணுவத்தின் பாதுகாப்புடன்,  உள்ளாட்சி தேர்தல்  நடைபெற்று வந்தாலும்,  இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல பகுதிகளில் அடிதடி வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. வன்முறை அச்சத்திற்கு மத்தியிலும் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்குச்சாவடிகளில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார். பல இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.

இந்j நிலையில்   கூச்பெஹார் அடுத்த சீதாயில் என்ற பகுதியில்  உள்ள ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு வாக்குச் சீட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படம், வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டு இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சூறையாடப்பட்டு அந்த இடமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கூச் பெஹாரின் ஃபலிமாரி கிராமப் பஞ்சாயத்தில் உள்ள வாக்குச் சாவடியில், பிஜேபி வேட்பாளரின் வாக்குச் சாவடி முகவர் மாதவ் விஸ்வாஸ் (படத்தில்) குண்டர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் வேட்பாளர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை நடைபெற்று தொடர் வன்முறை சம்பவங்கள் காரணமாக அங்கு நடைபெற்ற மோதல்களில் இதுவரை 12 வயது சிறுவன் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நேற்று நள்ளிரவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே முர்ஷிதாபாத்தில் வன்முறை ஏற்பட்டது. அதில் காங்கிரஸ் தொண்டர் அர்விந்தோ மொண்டல் கொல்லப்பட்டார். அவரது வீடும் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளது. இதனால், இரு கட்சியினருக்கும் இடையேயான மோதல் வலுவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டார்கள். அதே நேரம் அரவிந்தோ மொண்டலை தாங்கள் கொல்லவில்லை என திரிணாமூல் கட்சி தரப்பு விளக்கமளித்துள்ளது.

பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்குவங்க மாநிலத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் 928 மாவட்ட உறுப்பினர் பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே அங்கு பல்வேறு வன்முறை மற்றும் கலவரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. 65,000 துணை ராணுவப் படையினரும், மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வங்காளத்தில் அமைதியான வாக்குப்பதிவு என்ற கனவு தகர்ந்துள்ளது. அங்கு நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டம், . இது தேர்தல் அல்ல, கொடூரமான வன்முறை! நீதி வெல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Video courtesy: Thanks ANI