சென்னை: கோவை – சென்னை இடையே ‘செவ்வாய்தோறும்’ வாராந்திர ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய ரயில்வே நாடு முழுவதும் வந்தேபாரத் எனப்படும் அதிவேக ரயிலை இயக்கி வருகிறது.  உள்நாட்டிலேயே  முழுவதுமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த சொகுசு ரயில்கள் சென்னை உள்பட முக்கிய நகரங்களில்   இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை கோவை, சென்னை பெங்களூரு, சென்னை நெல்லை என 3 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், பயணிகளின் கூட்டத்தை குறைக்கும் வகையில், செவ்வாய்தோறும்,  கோவை-சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படஉ ள்ளது. இந்த சிறப்பு ரயில்,   இன்றுமுதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம்  வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல்- கோவை மற்றும் கோவை – சென்னை இடையே செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி சென்னை சென்ட்ரல் – கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நவ. 28 முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு 8.43 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து 8.45 மணிக்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டைக்கு 9.53க்கு வந்தடையும். அங்கிருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு காலை 11.23 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்திலிருந்து 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு ஈரோடு சென்றடையும், அங்கிருந்து 12.20 மணிக்கு புறப்பட்டு 1.03 மணிக்கு திருப்பூா் சென்றடையும். பின்னா் அங்கிருந்து 1.05 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.

அதுபோல மறுமாா்க்கத்தில், கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு 3.43 மணிக்கு திருப்பூா் வந்தடையும், அங்கிருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு 4.25 மணிக்கு ஈரோடு வந்தடையும். அங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு 5.18 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னா் சேலத்திலிருந்து 5.20 மணிக்கு புறப்பட்டு 6.48 மணிக்கு ஜோலாா்பேட்டை சென்றடையும், அங்கிருந்து 6.50 மணிக்கு புறப்பட்டு 7.48 மணிக்கு காட்பாடி சென்றடையும். பின்னா் அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த வாராந்திர சிறப்பு ரயில் 8 பெட்டிகளுடன் 2024 ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.