புதுச்சேரி:
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

“ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ராஜீவ்காந்தியின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை நாம் நேற்றைய தினம் அனுசரித்தோம். அனைத்து மாநிலங்களிலும் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டிருக்கிறது. நாம் மிகப்பெரிய தலைவரை இழந்து தவிக்கிறோம். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெருந்தன்மையோடு கூறியுள்ளனர். ஆனால், ராஜீவ் காந்தியின் இழப்பு எங்களுக்கெல்லாம் பேரிழப்பு. காங்கிரஸ் கட்சிக்கு அது மிகப்பெரிய இழப்பு. அவருடைய மரணம் இந்திய நாட்டிற்கு இழப்பு. ஆனால், ராஜீவ் காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரைக் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அது சில அரசியல் கட்சித் தலைவர்கள், சில பொதுநலவாதிகளின் கருத்தாக இருக்கலாம். ஆனால், காங், தொண்டன் என்ற முறையில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தாக வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் சரி. அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அது அவர்களுடைய கருத்து. ஆனால் ராஜீவ் காந்தியை கொன்றவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.