தமிழகம் மதசார்பற்ற மாநிலம். இங்கு ரதயாத்திரையின்போது மதக் கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளுக்கிடையே   கடந்த 10ம் தேதி ஆன்மிக யாத்திரையாக, நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார்.

விமான நிலையித்தில் அவரிடம் காவிரி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,  பதில் ஏதும் அளிக்காமல் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் 15 நாட்கள் என்று கூறப்பட்ட அவரது ஆன்மிக பயணம் 10 நாட்களாக சுருக்கப்பட்டது. இன்று இமயமலையில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

அப்போது போயஸ் தோட்டத்தில் அவர்  செய்தியாளர்களிடம், “இமயமலை சென்று திரும்பிய பிறகு புத்துணர்ச்சி அளிக்கிறது. தமிழகம் மதசார்பற்ற மாநிலம்.  ரத யாத்திரையின் போது மதக்கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும்.  இங்கு  மதகலவரம் எந்த வடிவில் வநவ்தாலும் அதை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “பெரியார் சிலையை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம்” என்றார்.