டில்லி:

மக்கு மகாத்மா காந்திதான் தேவை, ஹிட்லர், முசோலினிகள், மோடிகள் தேவையில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங் கூறி உள்ளார்.

நியூசிலாந்து மசூதிகளில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் ஏராளமானோர் இறந்துள்ள நிலையில், அந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியா சார்பாக பிரதமர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதுபோல, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் மசூதி தாக்குதலை கண்டித்த நிலையில், இரக்கமும், அமைதியும் தான் நமக்கு தேவை, தீவிரவாதம் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.

ராகுல்காந்தியின் டிவிட்டர் பதிவை ஷேர் செய்து மேற்கோள் காட்டி, முன்னாள் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் டிவிட்டர் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் “ ராகுல்ஜியின் கருத்தை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன். கவுதம புத்தர், மகாவீரர் போன்றோரால் வலியுறுத்தப்பட்ட அமைதி மற்றும் இரக்கம் தான் உலகிற்கு தேவை. வெறுப்பு மற்றும் வன்முறை தேவையில்லை.

மகாத்மா காந்தி மற்றும் மார்டின் லூதர் கிங் போன்றோர்கள் தான் உலகத்திற்கு தேவை. மாறாக ஹிட்லர்கள், முசோலினிகள் மற்றும் மோடிகள் உலகத்திற்கு தேவையில்லை” என்று  கூறி உள்ளார்.