சென்னை:  கோவை அருகே உள்ள ஈஷா மையத்தில் ஆதியோகி சிலை விவகாரம் அமைக்க தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறவில்லை என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், ஈஷா மையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. தங்களிடம் ஆதியோகி சிலை நிறுவியதற்கான முறையான அரசு ஒப்புதல்கள் உள்ளது என குறிப்பிட்டு உள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள், கோவையில் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈஷா யோகா கட்டடம் மற்றும் ஆதியோகி சிலை விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ளதாக கூறி,கடந்த 2017-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்டு 23, 2023)  சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, ஆதிகேசவலு அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில், இதற்கான திட்ட அனுமதி, கட்டுமான அனுமதி உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை என்று தெரிவித்தது. இதனையடுத்து, ஈஷா தரப்பு ஆவணங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, முறையான அனுமதி பெறவில்லை என்று தெரிந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .

இந்த நிலையில் இதுகுறித்து ஈஷா சார்பில் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, தங்களிடம் ஆதியோகி சிலை நிறுவியதற்கு உரிய ஒப்புதல்கள் உள்ளது எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதனை சமர்ப்பிப்போம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆதியோகி சிலை 2017 பிப்ரவரி 24ந்தேதி அன்று மகா சிவராத்திரி விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அதன் உத்தியோகபூர்வ ‘இன்கிரிடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தில் ஒரு புனிதத் தலமாக இச்சிலையை உள்ளடக்கியுள்ளது. அப்படி இருக்கும்போது தமிழ்நாடு அரசு அனுமதி பெறவில்லை என்று கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்தால் நல்லது.