சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தகூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தோம், ஆனால்,  அதுகுறித்து விவரிக்க முடியாது என செய்தியாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதில் தெரிவித்து உள்ளார்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே திட்டங்களை வகுத்து வருகின்றன. அதுபோல, நடிகர் கமல்ஹாசனும், தனது கட்சியின் நடவடிக்கை குறித்து இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதன்படி இன்று தனியார் ஓட்டல் ஒன்றில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  தீவிர கலந்துரையாடியதாகவும்,  நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினோம். கூட்டணி குறித்தும் விவாதித்தோம். ஆனால், அதுகுறித்து இப்போது விவரிக்க முடியாது என்று கூறினார்,.