சென்னை: பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, நாங்கள் தமிழர்கள் இல்லையா? என பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையும், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது உயிரிழந்த அதிகாரிகள், காவல்துறை, பொதுமக்களின் உறவினர்கள் கொந்தளித்துள்ளனர்.
 தமிழ்நாட்டிற்கும் தமிழக வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும்கரும்புள்ளியை ஏற்படுத்திய நாள் 1991 மே 21ம் தேதி. அன்றைய தினத்தை எளிதில் கடந்துவிட முடியாது. மிஸ்டர் ஒயிட் என்று அன்போடு அழைக்கப்பட்ட இளந்தலைவர் ராஜீவ்காந்தி, சென்னை அருகே பூந்தமல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் சின்னப்பின்னாமாக் கப்பட்டார். அந்த பகுதியே ரத்தக்காடாக காட்சி அளித்தது. இந்த வெடிகுண்டு வெடிப்பில் ராஜீவ்காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர்.  16காவலா்கள் உயிரிழந்தனா். 37காவலா்கள் படுகாயம் அடைந்தனா். பொதுமக்கள் பலரும் காயமடைந்தனா்.

ராஜீவ்காந்தியுடன் குண்டு வெடிப்பில்  ராஜீவ்காந்தி பாதுகாவலர் பிரதீப் கே குப்தா, கமாண்டோ வீரர் lரவிச்சந்திரன், மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் லதா கண்ணன், லதா கண்ணனின் 10வயது மகள் கோகிலவாணி, காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி,   மகளிர் காங்கிரஸ் தலைவர் சந்தானி பேகம், காவல்ஆயவாளர் எட்வர்டு ஜோசப், காவல்ஆய்வாளர் ராஜகுரு, காவலர் தர்மன், காவலர் முருகன்,  மகளிர் காவலர் சந்திரா, கல்லூரி மாணவி சரோஜாதேவி, பார்வையாளர் எத்திராஜூ உள்பட பலர் பலியானவர்கள்.

தமிழகத்தை தாய்வீடு போன்று கருதி வருகை தந்தை ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உண்டாக்கியது. அதைத்தொடர்ந்து அப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்த கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சொல்லப்போனால், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய குரல் கொடுக்கும் எந்தவொரு அரசியல் கட்சியினரும், இந்த கொலை படுபாதக கொலை சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இவர்களும் தமிழர்கள்தானே.

இந்த படுபாதக கொலை  சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு, சிலர் விடுதலையான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த  பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன் உள்பட ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும்  சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்இந்த நிலையில், தமிழகஅரசு எடுத்த முயற்சி காரணமாகபேரறிவாளனை நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். அதேசமயம் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்ததை தமிழகஅரசியல் கட்சிகள் தலைமீது தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். உச்சபட்சமாக பேரறிவாளன் திமுக, அதிமுக தலைவர்களை சந்தித்து நன்றி கூறியுள்ளார்.  பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. மாநில சட்டமன்ற பேரவையின் தீர்மானத்தின்மீது ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்காத சூழலை காரணம் காட்டியே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். அப்படியிருக்கும்போது,  மாநிலத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  சிறையில் இருந்து விடுதலையாகி வந்த ஒரு கொலை குற்றவாளியுடன் அமர்ந்து தேநீர் அருந்துவதும், அவரை தட்டிக் கொடுத்து வரவேற்றதும் விமர்சனங்களுக்காகி உள்ளது. முதல்வரின் நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. படுபாதக செயலில் ஈடுபட்ட கும்பலுடன் இணைந்திருந்த ஒரு குற்றவாளியுடன் மாநில முதல்வர் சரிசமமாக அமர்ந்து காபி சாப்பிடுவது, தமிழ்நாட்டிற்கே அவமானம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. முதலவர் மு.க.ஸ்டாலினின் இந்த செயல், ராஜீவ்காந்தி படுகொலையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேலும்  ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தின்போது தங்களது உறவுகளை இழந்தவர்கள்
 பேரறிவாளை விடுதலை செய்வதற்காக வழிவகுத்த மத்திய, மாநில அரசுகளையும் உச்சநீதி மன்றத்தையும் கடுமையாக விமர்சித்துள்ள துடன், எங்களது இழப்புக்கு யார் பதில் கூறுவது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். 
பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா? என கேள்வி எழுப்பியுள்ள பாதிக்கப்பட்ட அப்பாஸ் என்பவர்,  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 15 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பில் தனது தாயார் இறந்ததால் 10 வயதில் அனாதையானேன். எனது இழப்புக்கு யார் பதில் கூறுவது.பேரறிவாளனை விடுவித்த உச்ச நீதிமன்ற உத்தரவு தனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தெரிவித்து உள்ளார்.  “31 வருடங் களுக்குப் பிறகு அற்புதம்மாள் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் எங்களுக்கு, அது வாழ்நாள் முழுவதும் கண்ணீர் மட்டுமே தரும்” என்று  கூறினார்.
அதுபோல ராஜீவ் காந்தி படுகொலையின்போது உயிரிழந்த காவல்துறை பெண் போலீசாரின் தாயார், பேரறிவாளன் விடுதலையை கடுமையாக விமர்சித்து உள்ளார். நாங்கள் தமிழர்கள் இல்லையா? வெளிநாட்டைச் சேர்ந்தவர்களா? எங்களது இழப்புக்கு பதில் என்ன? என கொந்தளித்து உள்ளார்.
பேரறிவாளன விடுதலை  அரசியல் சாசனத்தின்படியே செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், நாட்டின் உயர்ந்த ஒரு தலைவர், குண்டுவெடிப்பு மூலம் கொலை செய்யப்பட்ட நிகழ்வை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது நமது நாட்டின் நீதித்துறை மீது விழுந்துள்ள கறை என்பதையும் மறுக்க முடியாது.
இந்த உத்தரவில், கவர்னரின் அதிகாரத்தை கேள்வி எழுப்பி உள்ள  உச்சநீதிமன்றம், கவர்னரின் கால தாமதத்தால்தான், பேரறிவாளை விடுதலை செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.  இதற்கு பதிலாக, மாநிலத்தில் கவர்னரே தேவையில்லை என்று கூறியிருக்கலாமே… திமுக அரசு கூறுவது போல போஸ்ட்மேன் வேலை பார்ப்பதற்கு எதற்கு இத்தனை கோடி செலவு….
நமது அரசியல் சாசனங்களும், பல சட்டங்களும் உடனே மாற்றப்பட வேண்டியது அவசியம்…. இல்லையேல் இந்தியாவின் சட்டமும், நீதிமன்றங்களும் உலக நாடுகளால் கேலிப்பொருளாக மாறிவிடும் என்பதையும் மறந்துவிட முடியாது…