சிவகங்கை: மருது பாண்டியர் சகோதரர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் கலந்துகொள்வோர், நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும், தேவர் குருபூஜை, மருது பாண்டியர் விழாக்களையொட்டி தென்மாவட்டங்களில் பதட்டம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நடப்பாண்டு, விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினம் அக்டோபர் 24-ம் தேதி திருப்பத்தூரில் அரசு நிகழ்ச்சியாகவும், அக்.27-ம் தேதி காளையார்கோவிலில் சமுதாய மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குரு பூஜையாகவும் நடத்துகின்றனர்.

அதுபோல,  தேவர் குருபூஜை விழா வருடம்தோறும் தமிழ்நாட்டிலுள்ள இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், அக்டோபர் மாதம் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 30ந்தேதி தேவர் குரு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் அரசியல் கட்சியினர், சமூதாயதலைவர்கள் பசும்பொன் வருக தந்து, தேவர் சமாதியில் வணங்கி செல்வது வழக்கம். இதன் காரணமாக சில சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி முன்னிலையில், மருது சகோதரர்களின் நினைவு தினம். தேவர் திருமகன் குருபூஜை தொடர்பான  முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கூடுதல் எஸ்பி சுந்தராஜ் மற்றும் பல சமுதாயங்களைச் சேர்ந்த  சமுதாயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர்,   குரு பூஜைக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்ல அனுமதியில்லை. சொந்த கார், வேன்கள் வைத்திருப்பவர்கள் அதில்  செல்லலாம். வாகனங்களின் மேற் கூரையில் பயணிக்கக் கூடாது. பயணங்களின்போது வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டக் கூடாது. கோஷங்களை எழுப்பக் கூடாது. நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை. அனுமதிக்கப்பட்ட வழிப் பாதைகளில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், அதேவேளையில், கார், வேன்களில் செல்வோர் உரிய ஆவணங்களை முன்கூட்டியே டிஎஸ்பிகளிடம் காட்டி அனுமதி பெற வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடிக்காதோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.