ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை  16 மேஜைகளில், 15 சுற்று  எண்ண ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார், இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதனால் வாக்காளர்கள் சின்னங்களை கண்டுபிடித்து வாக்களிக்க சற்று கூடுதல் நேரமானது. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றி ருந்தது.

இந்த நிலையில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சிசிடிவி காமிரா வசதியுடன்  வைக்கப்பட்டுள்ள சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குஎண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி, தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான சிவக்குமார் உள்பட அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி,  ஈரோடு கிழக்கு தொகுதியில், வாக்கு எண்ணிக்கை நாளை (2-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறத என்றவர்,   15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படும் என்றும் கூறினார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. போலீஸ் சார்பில் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூமுக்கு இரண்டு கம்பெனி மத்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமன்றி, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளூர் போலீசார் என 750 க்கும் மேற்பட்டோர் 2 மற்றும் மூன்றாவது அடுக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை வாக்கு எண்ணிக்கையின்போது, முகவர்கள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன. எவை எடுத்து வர வேண்டும் எதை எடுத்து வரக்கூடாது என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் வெற்றி சான்றிதழ் தரும் வரை முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். தண்ணீர் பாட்டில் இங்க் பென் தீப்பெட்டி போன்ற பொருட்கள் உள்ளே எடுத்து வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போலவே கிழக்கு தொகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு தொகுதி மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.