சென்னை,

மிழகத்தில் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2003-ஆம் ஆண்டு, தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்பினை தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு வருடமும் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் தலா ரூ.25,000/- வழங்கவும், அதற்கான நெறிமுறைகளும் வகுக்கப்பட்டது.

பிறகு இப்பயனாளிகளின் எண்ணிக்கையை 100-லிருந்து 200-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட் டது. மேலும், 2015-16ஆம் கல்வியாண்டு முதல் தொழிற் கல்வி பயிலுவதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவி மூலம், கல்வி உதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்களின் பெற்றோர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.50,000/-லிருந்து ரூ.72,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் தங்களது படிப்பினை தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது இந்நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் நிதியுதவி தொகையான ரூ.25,000/-ஐ முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.50,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், முதல் பட்டதாரி சலுகை பெற்றிருப்பினும், தொழிற்கல்வி பயில இயலாத மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களும் தொழிற்கல்வி உதவித்தொகை பெற்றிட, மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டு சிறப்பின மாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி உதவித்தொகை வழங்கவும் இந்த அரசாணை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.