சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி முன்னிலையில் உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை சென்னையில் துவங்கியது.

இத்தேர்தலில் நாசர் தலைமையிலான அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் பதிவான சுமார் 2,500 வாக்குகளில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தன.

தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்திக்கும் போட்டியிட்டிருந்தனர். அதேபோல் எதிரணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும் போட்டியிட்டிருந்தனர். பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கம் தனியார் வங்கி லாக்கரில் சீலிடப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. வங்கியிலிருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் குட் ஷெப்பர்ட் பள்ளியில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் எண்ணப்பட்ட நிலையில் பதிவான வாக்குகளை விட 5 வாக்கு சீட்டுகள் அதிகமாக இருப்பதாகக்கூறி ஐசரி கணேஷ் தரப்பு வாக்குவாதம் செய்தனர். இதனால் துணைத்தலைவர் பதவிக்கு விஷால் அணியின் பூச்சி முருகன் முன்னிலையில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பின்னர் துவங்கிய வாக்கு பதிவில் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 29 பதவிகளில் பெரும்பாலான பதவிகளுக்கு விஷால் அணியினரே முன்னிலையில் உள்ளனர். பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.