டில்லி

மேற்கு டில்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மறுத்துள்ளார்.

கடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் இருந்தே முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாஜக சார்பில் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன.   அவர் அரியானாவில் ரோக்தாக் தொகுதியில் போட்டியிடுவார் எனவும் பலர் கூறி வந்தனர்.  அவர் அந்த தேர்தலில் போட்டியிட வில்லை.

கடந்த வருடம் ஜூலை மாதம் டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி மற்றும் மத்திய அமைச்சர் ராஜவர்தன் சிங் ராதோட் ஆகியோர் கட்சியின் சம்பர்க் ஃபார் சமர்த்தன் என்னும் நிகழ்வின் கீழ் வீரேந்திர சேவாக்கை சந்தித்தனர்.   அதனால் சேவாக் விரைவில் பாஜகவில் இணைவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

டில்லி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர், “தற்போது பர்வேஷ் வர்மா உறுப்பினராக உள்ள மேற்கு டில்லி தொகுதியில் வீரேந்திர சேவாக்கை போட்டியிட வைக்க பாஜக தலைமை விரும்பியது.  ஆனால் வீரேந்திர சேவாக் தமக்கு அரசியல் விருப்பம் இல்லை எனவும் சொந்த காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட போவதில்லை எனக் கூறி மறுத்து விட்டார்.”என தெரிவித்துள்ளார்.