சென்னை: விழுப்புரம் அருகே குண்டல புலியூர் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு  உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன.

இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட  வயதான தனது மாமாவை காணவில்லை என்று சலீம்கான் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, உரிய அனுமதியின்றி இந்த ஆசிரமம் நடைபெற்று வருவது தெரியவந்தது. இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இதையடுத்து 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார்.

பல மாநிலங்கள் சென்று விசாரிக்க வேண்டியுள்ளதால் அன்புஜோதி இல்லம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். அன்புஜோதி இல்லத்தில் இருந்து ஜபருல்லா (70) என்பவர் உட்பட 15 பேர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொல்கத்தா பெண்ணை அடைத்து வைத்து நிர்வாகி ஜீபின் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.