தெலுங்கில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மகன் மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படத்தின் தலைப்பை நேற்று (மே 31) அறிவித்தார். அதற்கு, ‘சரிலேரு நீக்கெவரு’ ( உனக்கு நிகரானவர்கள் யாருமில்லை) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை, அனில் ரவிபுடி இயக்குகிறார். அனில் சுங்கரா, தில் ராஜு மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் மூலம், 13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயசாந்தி மீண்டும் திரையுலகிற்குத் திரும்புகிறார்.

படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் ஒரு சிறிய குறிப்பை அனுப்பியுள்ளார். அதை, விழாவில் இயக்குநர் படித்துக் காட்டியுள்ளார்.

“தெலுங்கில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுடன் ‘ஹிலாடி கிருஷ்ணுடு’தான் எனது முதல் படம். அங்கு ஆரம்பித்து 180 படங்கள்வரை நான் நடித்துவிட்டேன். அரசியலுக்காக படங்களில் நடிப்பதிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டேன். இப்போது கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபுவின் படத்தில் மீண்டும் நடிக்கத் தொடருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என அதில் குறிப்பிட்டுள்ளார்.