விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் ‘மாஸ்டர்’ என்பதால் திரை உலகமே, இந்த படத்தின் வெற்றி மற்றும் வசூல் நிலவரத்தை அறிய ஆவலாக உள்ளது.

வட இந்தியாவில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை திரையிடும் உரிமையை ‘யு.எப்.ஓ. மூவீஸ்’ (UFO MOVIEZ) என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தி மற்றும் தமிழில் – மத்திய இந்தியா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய பிராந்தியங்களில் 500 திரை அரங்குகளில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியிடப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

“கொரோனா காரணமாக சினிமாத்தொழில் நலிந்து போன நிலையில் ‘பான்’ இந்தியா சினிமாவாக வெளிவரும் ‘மாஸ்டர்’ திரைப்படம், சினிமாவை மீட்டெடுக்கும் என நம்புகிறோம். ‘மாஸ்டர்’ படத்தை உருவாக்கியவர்களுக்கு ‘சல்யூட்’’ என அந்த நிறுவன இணை நிர்வாக இயக்குநர் கபில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி