சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை, பின்னடைவு ஏற்பட்டுள்ளது  என மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அண்மையில்  உடல்நிலை பாதிப்பு காரணமாக, அவர் தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ந்தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக  2 நாட்களாக  இருமல், சளி மற்றும் தொண்டை வலியால்  அவர் அவதிப்பட்டதாகவும்,  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தேமுதிக தலைமை அறிவித்தது.

மேலும்,  அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியிருந்தது.

விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்த்து 10 நாட்களை கடந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு  தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அவர் சிகிச்சை பெறும் மியாட் மருத்துவமனை தரப்பில் மருத்துஅறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,  விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக மேலும் சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது என்றும், மேலும் 14 நாட்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.