சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், இன்று மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணமாகிறார்.

உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக தேமுதிக தலைவர் விஜய்காந்திற்கு பாதிக்கப்பட்டு உள்ளார். அவரால் இயல்பாக பேசவும், இருக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால், தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். அவரது குடும்பத்தினர்தான் கட்சியை நடத்தி வருகின்றனர்.

உடல்நலப்பாதிப்பு காரணமாக ஏற்கனவே பலமுறை, வெளிநாடுகளுக்கு சென்று அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த 2019 ஆம் ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சென்னை திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல்பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார்

இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக  மீண்டும் அமெரிக்கா செல்கிறார். இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் அவர்  அமெரிக்கா செல்ல இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. எமிரேட்ஸ் விமானம் மூலம் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உடன் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் உடல் பரிசோதனை முடிந்து ஓய்வு பெற்று பின்பு நாடு திரும்புவார் என்று தெரிகிறது.