விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், தேமுதிகவின் இளைஞரணி தலைவராக அவரின் மகன் விஜய பிரபாகரன் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி வரும் விஜயகாந்தின் பிறந்தநாளை, தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 15ம் தேதி, விஜயகாந்தின் பிறந்தநாளின் போது, தேமுதிகவில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க விஐயகாந்த் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி திருப்பூரில், விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தேமுதிகவின் பதினைந்தாம் ஆண்டு துவக்க நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க விஜயகாந்த் விரும்பினாலும், அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காத சூழல் இருக்கிறது. அதேநேரம், இவ்விழாவில் விஜயகாந்த் பங்கேற்பார் என்றும், அப்போது விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.