சென்னை: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் 75 ஆவது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத் தின் தொடர்ச்சியாக, தீரத் தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற கண்காட்சியை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

75 வது சுதந்திர தின விழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா ஆண்டையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட அரும்பெரும் தலைவர்களின் சிலைகள் இடம் பெறுகின்றன. மேலும், தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில், தேசத் தலைவர்களின் வரலாற்றுத் தொகுப்புகளின் அரிய புகைப்படங்கள் மற்றும் அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இப்புகைப்படக் கண்காட்சி இன்று முதல் 7.11.2021 வரை நடைபெறுகிறது. இதை பார்க்க அனுமதி இலவசம். பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நகரும் புகைப்படக் கண்காட்சிப் பேருந்து, தமிழ்நாட்டின் அனைத்து – மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவியர்கள் பார்வையிட்டு, தேசப்பற்றினையும் வரலாற்றினை யும் அறிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.