சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் ராமகோபாலன், இல. கணேசன் இருவரும் விரைவில் நலம் பெற்று பணியை தொடரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம். அவர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொதுப் பணியைத் தொடரவேண்டும் என்ற நம் விழைவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கெனவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலனும் நலம் பெற்று மீண்டும் தம் பொதுவாழ்வைத் தொடரவேண்டும் என்றும் விரும்புகின்றோம். கொள்கை மாறுபாடுகள் மனிதநேயத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கவே கூடாது என்று வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.