சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் வண்டலூரிலிருந்து 12 KM தொலைவில் வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.

ராமாயணத்தில் ஆஞ்சநேயர் மட்டுமே இலங்கைக்கு மூன்று முறை சென்று வந்தவர். மூன்றாவது முறை சஞ்சீவி மலையை சுமந்துகொண்டு சென்றார். வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை சுமந்துகொண்டு வரும்போது அந்தி நேரமாகி விட்டதால் தனது நித்திய கடமையான சந்தியாவதனம் செய்ய இம்மலையில் இறங்கினார்.

ஆஞ்சநேயர் திவ்ய உருவத்தில், முகம் வடக்கு நோக்கிப் பார்த்தபடி இருக்க உடல் கிழக்கு நோக்கி இருக்க, வலது பாதம் தரையில் ஊன்றி, இடது பாதம் பறப்பதற்குத் தயாராக உயர்த்தி தரையில் படாமலும், ஒரு கை பக்தருக்கு அபயம் காட்ட மறுகை இடையிலிருக்க, தலைக்கு மேல் தூக்கிய வாலில் மணியும், நாபிக் கமலத்தில் தாமரைப் பூவுமாக பொலிவுடன் காட்சி தருகிறார்.

ஆஞ்சநேயர் சந்நிதியின் எதிரிலேயே ராமர் சீதை லக்ஷ்மனருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். இக்கோயில் வியாச முனிவரால் கட்டபெற்றதாக ஐதீகம். இக்கோயிலை அடைய 108 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும் என்பது சிறப்பாகும்.

இத்தலத்து அனுமனை வேண்டினால் அணைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.