சென்னை:
சர்சைக்குரிய வகையில் இந்து தீவிரவாதம் குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, உடனே கைது செய்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே என தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கமலுக்கு எதிராக இந்து அமைப்பினர் திரண்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
அமைச்சரின் பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பொறுப்பான அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர், அரசியல் சாசனத்தை மீறி பேசியது கண்டனத்துக்குரியது என்று விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய வேண்டும் என்றும், அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.