சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகனும், வன்னியர் போராட்டம் என பாமக தலைவர் ராமதாசும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில், உச்சநீதிமன்றமும் வன்னியர் இடஒதுக்கீடு ரத்து, அரசியல் சானப்படி சரியே என்று கூறி உள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,  இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   20 சதவத இடஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்திளருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை இரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.  எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த, அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால், முந்தைய அ.தி.மு.க ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போ  சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்சநீதிமன்றத்தால் இச்சட்டம் இரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. முதலமைச்சர் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் 6 காரணத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஆணையம் ஒன்றை அமைத்து புள்ளிவிபரங்களை திரட்டி மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும். வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும் என்றும் போதுமான அளவு தரவுகள் இல்லாததே தீர்ப்பு சாதகமாக இல்லாததற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து சரியே! உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்