மயிலாடுதுறை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் புகழ்பெற்ற மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.  கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்த ஆண்டு கோவில் குடமுழுக்கு நடைபெற்றது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா விரைவில் நாட்டை விட்டு வெளியேறும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டதில் உள்ளது  வைத்தீஸ்வரன் கோவில்.நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமாகவும், தீராத நோய்களைத் தீர்க்கும் தலமாக விளங்கிவருகிறது வைத்திஸ்வரன் கோவில், இந்த கோவிலில், தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி அருள்பாலித்து வருகிறார்.

இத்தகைய பிரசித்திப் பெற்ற கோயிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு திருவிழா, பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன நிலையில், சுமார்  23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமரிசையாக நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ள இருந்த நிலையில், கொரோனா பரவல், சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு அரசின் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உள்பட்டும் கோயில் ஊழியர்கள் மட்டும் கலந்துகொண்டு, பக்தர்களின்றி குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.

முன்னதாக கடந்த 25ஆம் தேதி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய குடமுழுக்கு விழா இன்று எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலுக்கு பக்தர்கள் வருவதைத் தடுக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, வைத்தீஸ்வரன் கோயிலில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், சுமார் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.