சென்னை:

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரை,  இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததால், வைகோ மீது தேசத்துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் அப்போதைய திமுக ஆட்சியால்,  ஆயிரம் விளக்கு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன் நடைபெற்று வந்தது. வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.  ஏற்கனவே சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஜூலை 5ந்தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வைகோ மீதான வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அவர்மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதாக அறிவித்த நீதி மன்றம்,  வைகோவுக்கு ஒரு வருடம் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்  விதித்து தீர்ப் கூறி உள்ளது.