மதுரை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அரசியலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவர் தமிழகம் மற்றும் தேசிய அரசியல் ஆகிய இரண்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து இவர் மாநிலங்களவையில் ஆற்றிய உரை நாட்டின் அனைத்துப் பகுதி மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மதிமுக குறித்த மற்றும் பொது நலன் குறித்த வழக்குகளிலும் இவர் ஆஜராகி வாதாடி வருகிறார். ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைக்குப்பதால் வைகோவின் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தேனி  மாவட்டத்தில் நியூடிரினோ எதிர்ப்பு பிரசாரத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் கலந்துக் கொள்வதாக இருந்தார்.

உடல் நலப் பாதிப்பையொட்டி வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தேனி மாவட்டத்தில் வரும் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நியூடிரினோ எதிர்ப்பு பிரசாரத்தில்  வைகோ கலந்து கொள்ள மாட்டார் என மதிமுக அறிவித்துள்ளது.