சென்னை: தமிழகத்தில் 18 வயது முதல் 45வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடும்  திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருப்பூரில் தொடங்கி வைக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை   சேலம், திருப்பூர், கோவையில்  கொரோனா   தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்கிறார்.  இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நாளை  காலை 8.30 மணிக்கு புறப்படும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.15 மணி அளவில் சேலம் விமான நிலையம் வந்தடைகிறார்.

சேலம் இரும்பு ஆலை வளாகத்துக்கு காலை 10 மணிக்கு செல்லும் தற்காலிக மருத்துவமனை கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார்.

இதன் பிறகு கார் மூலமாக காலை 10.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூரை அடுத்த நேதாஜி அப்பேரல் பூங்காவுக்கு பிற்பகல் 12.15 மணி அளவில் வந்தடைகிறார். அங்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார். இந்தக்கூட்டத்தில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதன் பிறகு கார் மூலமாக பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு 1.30 மணி அளவில் கோவை சுற்றுலா மாளிகைக்குச் செல்கிறார்