ஹரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த பிரேம் சிங் இறந்து ஆறு மாதம் ஆன நிலையில், நேற்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் வந்திருக்கிறது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அவரது மகன் வினோத் அஹ்லவாத், தனது தந்தை 2021 ஏப்ரல் மாதம் 23 ம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பத்து நாட்களில் மே மாதம் 4 ம் தேதி தனது தந்தை இறந்து போனதாகவும் தெரிவித்துள்ள அவர், அவர் இறந்து ஆறு மாதம் ஆகும் நிலையில், 15 அக்டோபர் 2021 அன்று இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக பதிவாகியிருக்கிறது.

அவரது கொரோனா சான்றிதழை பரலோகத்திற்கு அனுப்பிவைக்க ஏதாவது வழியிருக்கிறதா என்று அந்த டீவீட்டில் பதிவிட்டிருக்கிறார்.

ஹரியானா-வில் கொரோனா தடுப்பூசி போடுவதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக கடந்த சில மாதங்களாக புகார்கள் குவிந்து வருகிறது, மூன்று மாதங்களுக்கு முன் 1500 ரூ பணம் பெற்றுக்கொண்டு இறந்து போன ஒருவருக்கு கொரோனா சான்றிதழ் வழங்கிய விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.