சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும், நவம்பர் 1ந்தேதி வெளியிட மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.  முன்னதாக வரும் 29ந்தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.  தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் 4 மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது. 2022ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம்  கூறியுள்ளது. இதனால் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ள மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் 1ம் தேதி வெளியிட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்படுகிறது. இதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தவும், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் அழைத்து கருத்து கேட்பது வழக்கமாகும் அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு முடிவு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து  வரும் 29ம் தேதி பகல் 12 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை அதிகாரி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதராகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.