சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இதுவரை 194 புகார்கள் வரப்பெற்றுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல்  ஜனவரி 28ந்தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல்  இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து நாளை (பிப்ரவரி 5ந்தேதி)  வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலையொட்டி, முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 914 புகார்கள் இதுவரை வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரணத் தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் ஏதும் இருந்தால், அதனைப் பெறுவதற்காக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் ” புகார் மையம்” 27.01.2022 அன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் மையத்தில், 04.02.2022 வரை, 194 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இந்தப் புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, உரிய விளக்கங்கள், தகவல்கள் மற்றும் தெளிவுரைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் அளிக்கப்பட்டு வருகின்றன.

புகார்களின் தன்மைக்கேற்ப, அவை சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும், உடனடியாக ஆய்வு செய்து புகார்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கட்டணமில்லா தொலைபேசி எண்கள், 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும்வரை இப்புகார் மையம் தொடர்ந்து இயங்கும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.