சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து வேட்புமனு பரிசீலனையும் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில்,  வேட்பு மனுக்களை திரும்ப பெற (வாபஸ்) இன்று மாலை வரையே அவகாசம் உள்ளது. அதைத் தொடர்ந்து இன்று இரவு வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புறஉள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்உள்ள 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல்  கடந்த ஜனவரி மாதம்  28-ம் தேதி தொடங்கியது. பிப். 4-ம் தேதியுடன்  நிறைவடைந்தது. இந்த தேர்தல்  மாநகராட்சிகளில் போட்டியிட 14,701 வேட்புமனுக்கள், நகராட்சிகளில் 23,354 வேட்புமனுக்கள், பேரூராட்சிகளில் போட்டியிட 36,361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 5ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.  வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 699 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது.முறையாக பூர்த்தி செய்யாதவை, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காதவை, வைப்புத்தொகை செலுத்தாதவை போன்ற காரணங்களால் பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து, வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்றுமாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து, இன்று மாலையே வேட்பாளர்இ றுதிப் பட்டியல்கள் வெளியிடப்பட உள்ளன.

அதன்பின்னர் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் பணி நடைபெறும்.