சென்னை: இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த உ.பி. அமைச்சர் சஞ்சய் நிஷாத் பதவி பறிக்கப்பட வேண்டும் என கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

உத்திரபிரதேச அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சியான நிஷாத் கட்சி தலைவரான சஞ்சய் நிஷாத், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். நீங்கள் ஹிந்தியைநேசிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புடையவர். நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம், ஆனால் இந்த நாடு ஒன்றுதான், இந்தியா  இந்தி பேசுபவர்களுக்கான இடம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. எனவே,  இந்தி பேசாதவர்களுக்கு இந்தியா ஏற்ற இடமல்ல என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  ‘இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளார். இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இவரைப் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும். மொழிப்பிரிவினையை தூண்டி பொது அமைதியை குலைக்கமுற்படுவதால் குற்றநடவடிக்கையும் தேவை!’ என தெரிவித்துள்ளனர்.