சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் முன்பதிவில்லா ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழக்கமான ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று இருந்து வந்தது. தற்போது கொரோனா குறைந்து, வழக்கமான சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளதால், ரயில்களிலும் முன்பதிவு இல்லா  பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்றும், முன்பதிவில்லா பயணத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் ரயில் பயணிகளை கருத்தில் கொண்டு முன்பதிவு இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது. இன்று முதல் முன்பதிவு இல்லா 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.