டில்லி,

மோடியின் அறிவிப்புக்கு எதிராக மத்திய அமைச்சர் ஒருவரே அநாகரிகமாக பொதுஇடத்தில் சிறுநீர் கழித்த செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர்மீது மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

சுவாஜ் பாரத் அபியான் ( Swachh Bharat Abhiyan)  என்ற திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் நோக்கமே நாடு முழுவதும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளில் உள்ள சாலைகளும் சுத்தம், சுகாதாரமாக இருக்க வேண்டும், திறந்த வெளிகளில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே.

ஆனால் மத்திய அமைச்சர்களே  மோடியின் திட்டத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் வேலூரில்  ராஜஸ்தானை சேர்ந்த அமைச்சர் கிரண் மகேஸ்வரி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வைந்திருந்தார். அப்போது, நிகழ்ச்சி நடைபெற்ற சுத்தமான பகுதியில், மீண்டும் குப்பைகளை போட்டு, பின்னர் அமைச்சர் கிரண் மகேஸ்வரி, துடைப்பத்தால் குப்பைகளை கூட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சுத்தமான  ரோட்டில் குப்பையை போட வைத்து, பின்பு அதை சுத்தம் செய்வது போன்று போஸ் கொடுத்த புகைப்படம் நாடு முழுவதும் வைரலாக பரவி  பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

அதேபோல் தற்போது மத்திய அமைச்சர் திறந்தவெளியில் சிறுநீர் கழித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், சமீபத்தில்  பீகாரின் கிழக்கு சம்பரன் தொகுதிக்குட்பட்ட மோதிஹாரி பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, சாலை ஓரத்தில் காரை நிறுத்தி சொல்லி இறங்கி அவர், அருகே உள்ள சுவற்றில் சிறுநீர் கழித்தார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக, பாதுகாப்பு படையினர் அருகே நின்றனர்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படம் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமைச்சர்களின் இதுபோன்ற அநாநகரிக செயல்களால் மோடி அறிவித்து சுத்தமான நாடு என்ற திட்டத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.