சென்னை: சென்னையில் 6 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மகளிர் உரிமை தொகை பதிவு உள்பட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 3,563 இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், சென்னையில் 6 இடங்களில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. இன்று ஜூலை 15, 2025 முதல் நவம்பர் 15, 2025 வரை, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 400 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் அரசின் பல்வேறு சேவைகளை எளிதாக பெறலாம்.
தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டடத்தின்படி, சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் 6 இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி,
- தண்டையார்பேட்டை பட்டேல் நகர் பள்ளி,
- சூளைமேடு கில் நகர் விளையாட்டு திடல்,
- பட்டாளம் ஸ்டிராஹன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம்,
- மாதவரம் தபால் அலுவலகம் சாலையில் உள்ள எம்.ஆர்.பேலஸ்,
- அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வேலம்மாள் அரங்கம்,
- சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரி
ஆகிய 6 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
இவற்றை சென்னைவாசிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
