டெல்லி: கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக நியமனம் செய்ய பிஎச்டி என்ற முனைவர் தகுதி கட்டாயமில்லை என யுஜிசி அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாக பணிபுரிய முதுநிலை படிப்புடன், பிஎச்எடி எனப்படும் முனைவர் படிப்பும் கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டுஉதவிப் பேராசிரியராகச் சேர முனைவர் படிப்பு கட்டாயம் என்று யுஜிசி அறிவித்தது. பின்னர்,  ஏற்கெனவே  முனைவர் படிப்பு (பிஎச்.டி.) படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு 3 ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து.2021- 22ஆம் ஆண்டு முதல், உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர பிஎச்.டி. கட்டாயம் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் பல கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில்,  உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர, ஜூலை 1 முதல் பிஎச்.டி. கட்டாயமில்லை என்றும் நெட்/ ஸ்லெட் ஆகிய தகுதித் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனவும் யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது.  NET/SET/SLET என்பது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் உதவிப் பேராசிரியர் பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச அளவுகோலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார்  வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.