திருவனந்தபுரம்,

கேரள தொலைக்காட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஜேக்கப் தாமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இவர் துறைமுகங்கள் துறை இயக்குனராக இருந்தபோது தூர்வாரி எந்திரம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் தொடர்பாக கேரள நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஜேக்கப் தாமஸ் பதவியிலிருந்து ஏன் இன்னும் நீக்கம் செய்யப்பட வில்லை என தொலைக்காட்சிகளில் காரசாரமாக விவாதம் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அதற்கு இடையூறு ஏற்படும் விதமாக தொலைக்காட்சி விவாதம் இருப்பதேன் என்று உயர்நீதிமன்றம் எரிச்சலுடன் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள தொலைக்காட்சிகளில் வரைமுறைகளை தாண்டியும், விதிகளை மீறியும் விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்வோர் பேசி வருவதாக நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமலும், பிரச்னைகள் குறித்து தீர விசாரிக்காமலும் விவாதங்கள் நடைபெறுவதாகவும் நீதிமன்றம் குறைகூறியுள்ளது.

மேலும் ஊழல் தடுப்பு அதிகாரி ஜேக்கப் ஜோசப்பை மாற்றும்படி உத்தரவிட்டதாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியது அவற்றின் பொறுப்பின்மையை காட்டுவதாகவும் நீதிமன்றம் சாடியுள்ளது.