டில்லி

மாதம் ரூ, 50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோர் குறைந்தது 1% ரொக்கமாக ஜி எஸ் டி அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஜி எஸ் டி முறை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பல வர்த்தக நிறுவனங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   இந்தியாவில் ஜிஎஸ்டி 5%, 12%, 18%. 24% என நான்கு அடுக்குகளாக இருந்தன.   அதன்பிறகு பல மாறுதல்கள் செய்யப்பட்டு ஒவ்வொரு அடுக்குகளிலும் உள்ள பொருட்கள் வேறு அடுக்குகளுக்கும் ஒரு சில பொருட்களுக்கு வரி விதிப்பு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல நிறுவனங்கள் போலி இன்வாய்ஸ் மூலம் வரி ஏய்ப்பு செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.   இதையொட்டி மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் ஜி எஸ் டி சட்டத்தில் புதிய விதியாக 86 பியை அறிமுகம் செய்துள்ளது.  இதன் மூலம் ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக மாத வர்த்தகம் செய்வோர்  செலுத்த வேண்டிய  வரி விகிதத்தில் 99% வரை ஏற்கனவே செலுத்தியுள்ள ஜி எஸ் டி யில் இருந்து சரி செய்து கொள்ளலாம் எனவும் மீதமுள்ள 1% ஜி எஸ் டியை ரொக்கமாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில் வர்த்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அல்லது பங்குதாரர் ரூ. 1 லட்சத்துக்கு மேல் வருமான வரி செலுத்தி இருந்தாலோ அல்லது அந்த ந்பர் செலுத்தி உள்ள வருமான வரியில் இருந்து முந்தைய ஆண்டு ரூ.1 லட்சத்துக்கு மேல் திரும்ப பெற்றிருந்தாலோ இந்த வரம்புக்குள் வர மாட்டார்கள் என கூறபட்டுள்ளட்க்ஹு.

இது குறித்து வருமான வரி நிபுணர் அபிஷேக் ஜெயின், “அரசின் இந்த அறிவிப்பினால் ஏற்கனவே செலுத்தி உள்ள வரியில் 99% மேல் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகும். அத்துடன் இந்த வரி விதிப்பின் மூலம் வரி விதிப்புக்குள் வராத பொருட்களுக்கும் 1% ஜி எஸ் டி ரொக்கமாகச் செலுத்த வேண்டி வரும்.  எனவே அரசு இதில் நியாயமான விலக்கு அளித்தால் வரி ஏய்ப்பைத் தவிர்க்க முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.