தஞ்சை

எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் தாக்கிப் பேசி உள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் நடத்திய அதிமுக எழுச்சி மாநாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர்.  ஏறகனவே ஊடகங்களில் அந்த மாநாட்டில் ஏராளமான உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்த வண்ணம் உள்ளது.  நேற்று தஞ்சையில் அமமுக பொதுச் செயலர் டி டி வி தினகரன் செய்தியாளர்களிடம் இந்த மாநாட்டைப் பற்றி பேசி உள்ளார்.

டிடிவி  தினமரன்

”மதுரையில் நடைபெற்றது. எழுச்சி மாநாடு இல்லை. அது பழனிசாமி கம்பெனிகளுக்கான வீழ்ச்சி மாநாடு. முன்னாள் அமைச்சர்கள் கூறினார்கள் 15 லட்சம் பேர், 20 லட்சம் பேர் அழைத்து வருகிறோம் என்று ஆனால் இவ்வளவு பணம் செலவு செய்தும், வண்டி வாகனம் ஏற்பாடு செய்தும், ஒரு வாகனத்திற்கு 5 பேர் மட்டுமே வந்ததாக அங்கு உள்ளவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தப்பட்டார்கள். அதிகபட்சமாக 2 முதல் 2.5 லட்சம் பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்துள்ளனர்.

புரட்சி என்கிற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். துரோகத் தமிழர் என்றும், துரோகத்திற்கு எடுத்துக்காட்டான தமிழர் என்று அவருக்கு பட்டம் கொடுக்கலாம். அவர் என்ன புரட்சி செய்து விட்டார், காலில் விழுந்து பதவி பெற்றுக்கொண்டது, பதவியில் நீடிக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு துரோகம் செய்தது. கட்சியை கபளீகரம் செய்த தான் சாதனை என்று அவருக்கு பட்டம் கொடுத்தால் அது வெட்கக்கேடான செயல்.

பழனிசாமி ஆட்சிக்காலத்தில் எதற்கெல்லாம் எதிர்த்து ஸ்டாலின் குரல் கொடுத்து, சாலையில் போராட்டம் செய்தாரோ, அதையொல்லாம் இப்போது ஹிட்லர் போல் அதை நிறைவேற்றி வருகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மக்கள் அவர்களுக்கு ஆட்சி பொறுப்பு கொடுத்ததே தவறு.

பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. இரண்டு பேரும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள் போல் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்று சக்தியாக வருங்காலத்தில் அ.ம.மு.கவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

பிஜேபியுடன் எப்போதும் எனக்கு உறவு இல்லை. என்றும் அதில் நண்பர்கள் தான் இருக்கிறார்கள்.

தேர்தலுக்கான கூட்டணி என்பது யார் வரக்கூடாது யாரை வரவிடக்கூடாது என்பதற்காகத்தான். எங்களை பொறுத்தவரை தீய சக்தி தி.மு.க எந்த நேரத்திலும் வெற்றி பெறக்கூடாது. அதற்காக எந்த கூட்டணியும் நாங்கள் ஏற்க தயாராக இருக்கிறோம். கூட்டணி இல்லை என்றாலும் நாங்கள் தனித்து போட்டியிடும் தயாராக இருக்கிறோம்.

நானும் – ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம். வரும் காலத்தில் எப்படி செயல்படுவோம் என்பது குறித்து ஒன்றாக இணைந்து முடிவு எடுப்போம்.

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சிகளும் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். நாங்களும் அதற்காக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் தி.மு.க ஒரே கையெழுத்தில் நீக்கி விடுவோம் என கூறினார்கள். அவர் எப்படி நீக்குவார் என பார்த்துக்கொண்டிருக்கிறோம். டில்லியில் போராட்டம் நடத்தட்டும். அதனால் என்ன விளைவு வருகிறது என்று பார்ப்போம்”

என்று தெரிவித்துள்ளார்.