சென்னை: கடல்ல பேனா வைக்க ரூ.89 கோடி இருக்கு; ஆனால் ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதியில்லையா?  என தமிழகஅரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றாதை கண்டித்து, தங்களது கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஆசிரியர், ஆசிரியைகள், சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கின்றனர். இதுதொடர்பாக  கல்வித்துறை செயலர் மற்றும் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதற்கிடையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களில் 100க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இநத் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டி.பி.ஐ வளாகத்தில் நேரில் சந்தித்து இன்று பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, இடைநிலை ஆசிரியர்கள் சம ஊதியம் கேட்பது நியாயமான கோரிக்கை. அதை ஏற்க மறுக்கும்  திமுக அரசின் எதிர் செயல்பாடு வேதனை அளிக்கிறது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை கூட அரசு காலம் தாழ்த்துவது ஏற்படையது அல்ல. இதே விஷயத்துக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். தற்போது ஆட்சிக்கு வந்தபின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இது சரியானது அல்ல;

5 வது நாளாக ஆண்கள், பெண்கள் என பல மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் இந்த அரசு, தங்களின் ஆட்சியை திராவிட மாடல் என சொல்வது சரியானதல்ல. ஆசிரியர்களுடன் அரசுத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதேபோல் முதல்வர் இவர்களை சந்திக்காமல் இருப்பது சரியான அனுகுமுறை  கிடையாது என்று கூறியதுடன்,  ஆசிரியர்கள் கோரிக்கைக்கு நிதியில்லை என சொல்லும் திமுக அரசு, கடலில் போனா வைப்பதற்கு மட்டும் எப்படி 89 கோடி செலவு செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியவர்,  போராடி வரும் ஆசிரியர்கள் நிலையை பார்த்தால் புத்தாண்டு வாழ்த்து கூட சொல்ல முடியவில்லை என கூறினார்.