வேலூர்: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் உள்பட மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வேலூர் சத்துவாச்சாரியில்  நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சு. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில்  நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி முகாம்களில்,  முதல் தவணை தடுப்பூசி, 2ம் தவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் போடப்படுகிறது. தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் 3.50 கோடியாக உள்ளனர். இவர்களை இலக்காக வைக்கப்பட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 27 லட்சம் தடுப்பூசி தமிழகத்தில் கையிருப்பு உள்ளது.

வேலூர் காட்பாடியில்,  அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கமல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வு முடிந்தபிறகு பணிகள் தொடங்கப்படும் என்றவர்,  மருத்துவமனையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் அக்டோபர் இறுதிக்குள் நிரப்பப்படும்.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டத்துக்கு புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கவும், கூடுதல் தடுப்பூசி கேட்டும் அடுத்த வாரம் ஒன்றிய சுகாதார துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன் என்று கூறயிவர், தமிழ்நாட்டில் குரங்கம்மை பரவாமல் தடுக்க,  தொடர் கண்காணிப்பு செய்து வருகிறோம். இதுவரை தமிழகத்தில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.