பெங்களூரு:

ர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு  இன்னும் சிறிது நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதத்தின் போது கடும் அமளி நிலவி வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று கூடியதும்,  முற்பகல் 11 மணி அளவில்  அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் குமாரசாமி தாக்கல் செய்தார். அப்போது பேசிய குமாரசாமி, சுய விருப்பதின் காரணமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்ததாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் கூறினர். அதேசமயம், கர்நாடக அரசில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது என அவர்கள் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளனர் என்று தெரிவித்தவர், இந்த அரசியல் குழப்பத்திற்கு சில எம்எல்ஏக்கள் ராஜினாமா தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த அரசை கலைக்கும் முயற்சியின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து பேச வேண்டியது அவசியம் என்று கூறி தொடர்ந்து பாஜகவை மறைமுகமாக சாடினார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டணி ஆட்சி குறித்து தொடக்கம் முதலே சிலர் தவறான தகவல் பரப்பினர் என்றும்,

எடியூரப்பாவிற்கு திடீரென என் மீது கருணை ஏற்பட்டுள்ளது, அதற்கு நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன், எடியூரப்பா ரொம்ப அவசரப்படுகிறார் என்றும், அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நாங்கள் தயார்  என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அமளி ஏற்பட்டது. தொடர்ந்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினர் பேசி முடித்தும், வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.


224 உறுப்பினர்கள் மற்றும் ஒரு நியமன உறுப்பினர் உட்பட கர்நாடக சட்டப்பேரவையின் மொத்த பலம் 225. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 பேர்  ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் 65 ஆக உள்ளது.

37 உறுப்பினர்களைக் கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் 34 ஆக உள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு உறுப்பினரும், நியமன உறுப்பினர் ஒருவரும் இக்கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்.

இதனால், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் மொத்த பலம் 101 ஆக உள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 107 உறுப்பினர்களும், சுயேட்சை உறுப்பினர்கள் 2 பேரின் ஆதரவும் உள்ளது. இதனால், பாரதிய ஜனதாவின் பலம் 109 ஆக உள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாவிட்டால், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 209 ஆக இருக்கும். அப்போது, குமாரசாமி அரசு பெரும்பான் மையை நிரூபிப்பது கேள்விக்குறியாகி விடும்.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சி வெற்றி அடைந்துள்ள தாக கூறும் மாநில காங்கிரஸ் தலைவர்கள்,  ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களில் 4 பேரான முனிரத்னா, பசவராஜ், ஆனந்த் சிங், கே.சுதாகர், ராமலிகா ரெட்டி ஆகியோர், தங்களது ராஜினாமா  வாபஸ் பெற்று இன்று குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் குமாரசாமி அரசு வெற்றிபெறுமா என்று இந்திய அரசியல் பார்வையாளர்கள் அனைவரும் கண்களும் கர்நாடகாவை எதிர்நோக்கியே உள்ளன.