நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், வரும் 15ஆம் தேதி பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்து உள்ளார். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனிடம், டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். இந்தத் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாத டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குள் புகுந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது. இதன் பின்னர், வன்முறையை தூண்டி விட்டதாகக் கூறி, டொனால்டு ட்ரம்பின் டிவிட்டர் கணக்கை, அந்நிறுவனம் முடக்கியது. தற்போது டிவிட்டர் எலன் மஸ்கின் கையில் சென்ற நிலையில், மீண்டும் டிவிட்டர் கணக்கை ஒப்படைப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை ஏற்க டிரம்ப் மறுத்து விட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “வரும் 15 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை ப்ளோரிடா மார்-ஏ-லகோவில் (பண்ணை வீடு) வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன்” என தெரிவித்து உள்ளார்.

இந்த அறிவிப்பு மூலம், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்தா அல்லது வேறு ஏதேனும் தகவலா என அமெரிக்கர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.