டொனால்ட் ட்ரம்பின் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் செயல்கள் மக்கள் மத்தியில் ஆதரவிழந்துள்ளது என்பதை உடகங்கள் நடத்திய  கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன, ஏனெனில் அவரது ஆலோசகர்கள் மற்றும் குடியரசுக் கட்சி கூட்டணியினர், அமெரிக்க ஜனாதிபதியின் தொற்றுநோய் குறித்த தினசரி விளக்கங்கள் குறித்து கவலைப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால்,இதே டிரம்ப்,  வைரஸ் தாக்குதல் அமெரிக்காவில் தொடங்கியபோது மக்கள் ஆதரவை பெற்றிருந்தார்.  மேலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரது வேலை ஒப்புதல் மதிப்பீடு கிட்டத்தட்ட மிக உயர்ந்த மதிப்பீட்டை எட்டியது. ஆயினும், அவரது  அரசாங்கத்தின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்த கவலைகள் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஜனாதிபதி சரியாக செயல்படுகிறார் என நம்புபவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

இந்த வாரம் ஒரு ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கருத்துக் கணிப்பில்,  கோவிட் -19 ஐ டிரம்ப் கையாளுவதற்கான ஆதரவு, 48% – ல் இருந்து 42% ஆக குறைந்துவிட்டது. சி.என்.என் நடத்திய ஆய்வின்படி, 45% அமெரிக்கர்கள் டிரம்பின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கைகளை ஒப்புக்கொள்கிறார்கள். ட்ரம்பைப் பற்றி இன்னும் கவலைப்படக் கூடிய செய்தி, ஜோ பிடனுக்கு எதிரான போட்டியில் அவரது குறைந்து வரும் ஆதரவின் சதவிகிதம். நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடையே டிரம்பைவிட அதிகமாக, பிடன் 53% ஆதரவைப் பெற்று முன்னணியில் இருக்கிறார்.

ட்ரம்பின் ஆலோசகர்கள் மற்றும் குடியரசுக் கட்சி கூட்டணியினர் பலர் அவரது பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவரது செயல்திறனைப் பற்றி அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அவை வெறும் தினசரி சடங்காக மாறிவிட்டது. பெரும்பாலும் பல மணிநேரங்கள் நீடிக்கும் இந்நிகழ்வில், தோற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளாக அவர் அளித்த பதில்கள் மற்றும் பொய்கள் மற்றும் தவறான தகவல்களைப் பற்றி கட்சியின் மூத்தவர்கள் திகைத்துப் போயிருப்பதாக ஆக்சியோஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளன.

“வெள்ளை மாளிகையின் அதிகாரிகள், கட்சி கூட்டணியினர், குடியரசுக் கட்சியின் சட்டமியற்றுபவர்களும், ஜனாதிபதியின் இந்த தினசரி நிகழ்வு ஜனாதிபதிக்கு உதவுவதை விட, அவரின் செல்வாக்கை காயப்படுத்துவதாக வெகுவாக நம்புகிறார்கள்” என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் விசுவாசமான லிண்ட்சே கிரஹாம் கூட ட்ரம்ப் தனது விளக்கவுரைகளின்போது கட்டுப்பாடாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்களில் ஒருவர். இது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறுகிறது என்றும், ஒரு சரியான மனநிலையில் இல்லாத ஜனாதிபதி பத்திரிகையாளர்களிடம் கோபமாக நடந்துக் கொள்வது வழக்கமாகிக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. ட்ரம்ப் “சில சமயங்களில் தனது சொந்த செய்தியை மறந்து விட்டு வேறு ஏதேனும் பேசிக் கொண்டிருப்பார்” என்று கிரஹாம் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார். மேலும், மேலும் இந்த தினசரி நிகழ்வை, வாரத்திற்கு ஒரு முறை என மாற்ற ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாகவும் கூறினார். கொரோனா வைரஸுக்கு வெள்ளை மாளிகை வெளிப்படுத்தும் பிரதிபலிப்பு, டிரம்ப்பின் மறுதேர்தல் வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று குடியரசுக் கட்சியினர் கவலைப்படுவதாக ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது.

“அடுத்த 4-8 வாரங்கள் உண்மையில் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதை தீர்மானிக்கப் போகிறது” என்று பெடரல் ரிசர்விற்கான முன்னாள் டிரம்ப் வேட்பாளர் ஸ்டீபன் மூர் ஆக்சியோஸிடம் தெரிவித்தார். பழமைவாத வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பொதுவாக மன்னிக்கும் மனப்பான்மைக் கொண்ட ஆசிரியர் குழுவும் டிரம்பின் தினசரி விளக்க நிகழ்வுக்கு எதிராக திரும்பியுள்ளது. “வைரஸின் ஆபத்துகள், அமெரிக்கர்கள் தங்கள் நடத்தையை எவ்வாறு மாற்ற வேண்டும், அதை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு நல்ல யோசனையாக இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது” என்று ஜர்னல் எழுதியது. “ஆனால் கடந்த மூன்று வாரங்களில் திரு டிரம்ப் இந்த நிகழ்வு, அவரை காட்சி பொருளாக வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக முடிவு செய்து விட்டாற்போல் தெரிகிறது.” என்று எழுதியுள்ளது.

எவ்வளவோ கோரிக்கைகள், வேண்டுகோள்கள் இருந்த போதிலும், வழக்கமாக தனது பிரச்சாரத்திற்காகவும், பேரணிகளில் பேசவும் வேண்டிய செய்திகளை டிரம்ப் அவர்கள் தினசரி விளக்க நிகழ்வை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், தனது பிரச்சார நிகழ்வுகளை எந்த நேரத்திலும் இரத்து செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது. “ஜனாதிபதி டிரம்ப் பேசும் தொனி அல்லது செய்திகளை வெளியிடுவதில் சிக்கல் கொண்டுள்ளார் என்று கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜுட் டீரெ நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.

மக்களைக் காப்பது வேறு எதையும் விட முக்கியமானது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!

தமிழில்: லயா