அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியை அமெரிக்கா வரும்படி  அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 45‌-வது அதிபராக கடந்த‌ 20-ஆம் தேதி பதவியேற்ற டிரம்ப், வெளிநாட்டுத் தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடி வருகிறார். இதேபோல் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப், பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவும் இந்தியாவும் தோழமையுடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

மேலும், “அமெரிக்காவின் உண்மையான நட்புநாடாக இந்தியா திகழ்கிறது” என்று தெரிவித்த டிரம்ப், அமெரிக்கா வரும்படி மோடிக்கு அழைப்பு விடுத்தார்.