சென்னை

மிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு சிவராசு இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மாநிலம் எங்கும் கனமழை  பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.   அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலும் இதே நிலை நீடிப்பதால் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.  இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில்

”தற்போது கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது, தவிர கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது.

இதையொட்டி மேட்டூர் அணையானது அதன் முழுக்கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது.   ஆகவே,வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்று (08.11.2021) மாலை 6.00 மணிக்குத் திறந்துவிடப்படுகிறது.  எனவே கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும் காவிரியில் அதிக நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு “செல்பி” (selfie) எடுக்க அனுமதி இல்லை.

மக்கள் வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம்.  வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளத் தெரிவிக்கலாம். TN- SMART என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.” 

என அறிவிக்கப்பட்டுள்ளது.