திருச்சி : மனநலம் குன்றிய பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த திருச்சி மாநகர ஆயுதப்படை கம்பெனியில் பணிபுரியும் தலைமைக்காவலர் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளார். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே, பாலியல் சேட்டை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின்  25 வயது இளம்பெண், அவ்வப்போது, மனநல பாதிப்பு காரணமாக,  வீட்டில் இருந்து வெளியேறி அந்த பகுதிகளில் கால்போன போக்கில் சுற்றித்திரிந்துள்ளார். இதை பார்க்கும் அக்கம் பக்கத்தினர் அந்த இளம்பெண்ணை மீட்டுவீட்டில் ஒப்படைந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்றும் இளம்பெண்ணின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற நிலையில், மனம்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். அவரை பெற்றோர்கள் தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், மனநிலை பாதித்த அந்த இளம்பெண்ணை கண்ட காவலர் ஒருவர் எடமலைப்பட்டி புதூர் ரயில்வே மேம்பாலம் அடியில், ரயில்வே கிராசிங் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் சேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வழியே சென்ற நபர் ஒருவர் இளம்பெண் ஒருவர் மேலாடை இன்றி அறைக்குள் இருப்பதை கண்டதும், அதிர்ச்சியடைந்து, அருகே இருந்த மக்களை கூப்பிட சத்தம் போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமைக்காவலர், அங்கிருந்து தனது இருச்சக்கர வாகனத்தில் எஸ்கேப்பாகி உள்ளார்.

பின்னர் அங்குவந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டனர். இதுதொடர்பாக  எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர், இளம் பெண்ணை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக அந்த இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிராக்கள் மற்றும் மக்கள் கூறிய அடையாளங்களை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர்,  இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்துவிட்டு  தப்பி ஓடிய நபர் திருச்சி மாநகர ஆயுதப்படை கம்பெனியில் பணிபுரியும் தலைமைக்காவலர் கருணாநிதி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை கைது செய்ய எடமலைப்புதூர் காவல்துறையினர்,  விசாரணை நடத்தி, துறையூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே  மதுரையில் இரவு காட்சிக்கு சென்ற பெண்ணை விசாரணைக்கு என அழைத்து சென்ற காவலர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், தற்போது திருச்சியில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வேலியே பயிரை மேய்ந்த இதுபோனற் சம்பவங்கள் அதிகரித்து வருவது தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.