திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே நாங்குநேரியில் சக மாணவரால் தாக்கப்பட்ட மாணவருக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்க உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவனை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டதாகத் தெரிவித்தார்.

மாணவருக்கு அறுவைச்சிகிச்சை செய்யச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்காகச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.